Thursday, February 06, 2014

யானை டாக்டர்

நீங்கள் யானையை எப்போதாவது பார்த்ததுண்டா? பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? நான் சமீபத்தில் பார்த்ததில்லை, சென்ற ஆகஸ்ட் தாய்லாந்திற்கு செல்லும் போது சாகசம் செய்துகொண்டிருந்த யானைகளைப் பார்த்தேன். மிகப் பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்ட யானையின் கண்களைப் பார்த்தால் மிக எளிமையாக என்னிடம் சம்பாஷனை செய்வதாக 'நான் ரொம்ப நல்லவன்' என்று சொல்வதாகத் தோன்றியது. பாசத்தில் செல்லமாக ஒரு அடி அடித்து வைத்தால் என்ன செய்வது என்று பயந்து, அருகே செல்லவில்லையே தவிர யானை மீது அன்பு உண்டு. ஜெ.மோ.வின் 'யானை டாக்டர்' படித்த பிறகு அந்த அன்பு காதலாகிப் போனதென்றால் மிகையில்லை.

'யானை டாக்டர்' படிக்கும் போது என்னமா எழுதுறாருப்பா என்று பிரம்மிக்க வைக்கும் எழுத்துநடை. நமக்கே தெரியாமல் நம்மை காட்டுக்குள் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி, சூழல் புரிய வைத்து, ஒவ்வொன்றையும் வேறு கோணத்தில் இரசிக்கச் செய்து, சராசரி மனிதர்களான நம்மையே சுயம் வெறுக்கச் செய்து, மிருக உலகத்தை படிக்கச் செய்து அசர வைத்திருக்கிறார் ஜெ.மோ. கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே வேகத்தில் பயணிக்கிறது. கதையல்ல வாழ்வுதான், நடந்த உண்மைதான், ஆனால் அந்த சம்பவங்கள் ஆழ் மனதில் பதிய வைக்க அவருடைய கதையோட்டமும் சொற்பிரயோகங்களும் கிறங்க வைக்கிறது.

ஒவ்வொரு கதைக்கரு பிறப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமில்லையா? இந்தக் கதை பிறப்பதற்கான காரணத்தைக் கதையிலேயே கண்டு கொண்டதாக உணர்ந்தேன். மிருக உலகைப் பற்றியோ, அதன் இயல்பைப் பற்றியோ, காட்டின் வாழ்வும் சூழலைப் பற்றியும் பள்ளியிலேயோ கல்லூரிலேயோ படித்திருக்க மாட்டோம். நம் தலைமுறையில் பெரும்பாலோருக்கு லட்சியமெல்லாம் படிப்பதும், வேலைக்குப் போய் சம்பாதிப்பதும்தானே தவிர கனவுகளோ இப்படியான தெய்வீக உலகை அணுகவோ இரசிக்கவோ தெரிந்துக் கொள்ளவோ நேரமில்லாததால் கடந்து செல்கிறோம். அந்த உலகைக் கொஞ்ச நேரமாவது அனுபவிக்கச் செய்திருக்கிறார், ஜெ.மோ. அதைக் குறிப்பிட்டும் உள்ளார்.

குளிர்காலமென்பதால் தோல் உலர்ந்தால் உடனே 'மாய்ஸ்ச்சரைசரை' எடுத்துத் தடவிக் கொள்ளும் நான் 'யானை டாக்டரில்' அவர் வலியை கவனிப்பது நல்ல பழக்கமென்றும் அது ஒரு தியானமென்றும் வலியென்பது சாதாரண நிலையில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிற நிலை என்றும் சுலபமாக சொல்லிச் சென்றது ஆழ் மனதில் பதிந்து ஒவ்வொரு விஷயத்தையும் வேறு விதமாகப் பார்க்கவும் கையாளவும் ஆரம்பித்துவிட்டது மனது. நமக்கு வலி ஏற்படும் போது உடனே அந்த நிலையிலிருந்து மாறத் துடிக்கும் நாம், மாத்திரை மருந்தை உட்கொள்கிறோம். அதுவே தேவையில்லாத பல புதிய நோயை உண்டு பண்ணுகிறது என்ற சிந்தனை எனக்குச் சத்தியமாகப்பட்டது. அந்த சத்தியமான வார்த்தைகளைச் சோதித்தும் பார்த்தேன். என் காது மடலில் வந்த சின்ன பருவை ஒன்றுமே செய்யாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தேன், அதற்கே வெறுப்பாகிப் போய்விட்டது வடுவில்லாமல்.

எனது பிரசவத்தின் போது 'ஐயோ அம்மா' என்று கூக்குரலிடும் பெண்களுக்கு மத்தியில் நான் மிகவும் அமைதியாக வலியை தாங்கிக் கொண்டு மற்றவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு நெளிந்தேன். காரணம் 'புஷ்' செய்வதற்கு மிகுந்த சக்தி வேண்டும் அந்த வகை 'எனர்ஜியை' கத்தி அலறி வீணாக்காமல் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று படித்திருந்ததை மனதில் வைத்து செயல்படுத்தினேன். ஆனால் மிருகங்கள் எதைப் படித்து இதையெல்லாம் தெரிந்து கொண்டது என்ற பிரம்மிப்பு ஏற்பட்டது இந்தக் கதையை வாசிக்கும் போது.

"யானையை கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…" என்பவர் "உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம்" என்றும் சொல்கிறார். இந்தக் கதை நம் வாழ்வியலோடு இயைந்து நிற்பதால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடக் காட்டிலிருந்து வெளிவர சில நாட்கள் பிடிக்கிறது நமக்கு.

பல்லி என்றால் எனக்கு பயம். புழுவைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும். இந்த அற்ப ஜந்துகளைப் பற்றி இந்தக் கதையில் சிலாகிக்கிறார். புழுவை கைக்குழந்தை என்கிறார், குழந்தை மீது என்ன அருவருப்பு என்று கேள்வி எழுப்புகிறார், ஒப்பீடாக புழு கைக்குழந்தை போல் நடக்க முடியாது, பறக்க முடியாது, தவழும், சாப்பிடும் என்கிறார். ஒரு விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்து வர்ணிப்பது எனக்கு அற்புதமாகத் தோன்றியது. இனி இந்த அற்பப் படைப்புகளைப் பார்த்தால் குழந்தையென்று கொஞ்சுவேனா? கண்டிப்பாக முடியாது ஆனால் அருவருக்காது என்று நினைக்கிறேன்.

மனிதனைப் பற்றிச் சொல்லும் போது "உனது அன்பு ஆசை மட்டுமே. உனது நட்போ ஏமாற்று. உனது புன்னகை போலி, உனது சொற்கள் வெறும் மோசடி" என்று சொன்னவர் மற்றொரு இடத்தில்..."அந்தா நிக்கிறானே செல்வா…அவனை மாதிரி வேற ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியுமாய்யா? அந்த நிமிர்வும், அந்த கருணையும், அற்பத்தனமே இல்லாத அந்த கடல்மாதிரி மனசும்…அதை அறிஞ்சா அப்றம் எந்த மனுஷன் உனக்கு ஒரு பொருட்டா இருக்கப்போறான்?" என்ற கேள்வியில் உண்மையில்லாமலில்லை. எதிர்பார்ப்பில்லாத, ஆசைகள் துறந்த, கருணையும் அன்பையும் மட்டும் சொரியும் மனிதர்களைக் காண்பது அரிதாகிவிட்டதாலா இந்தக் கதையை மிக நெருக்கமாக உணர்ந்தேன், பரவசமடைந்தேன்...?

நீங்களும் படித்துவிட்டு... நானே மிக தாமதமாகப் படித்துள்ளேன், ஆதலால் நீங்களாவது தாமதிக்காமல் படித்துவிட்டு நான் உணர்ந்ததைப் போல் நீங்களும் உணர்ந்தீர்களா என்று பகிர்ந்து கொள்ளுங்கள். 'யானை டாக்டர்; நன்றாகவே வைத்தியம் பார்த்துள்ளார். இனி யானையைப் பார்க்கும் போது இந்தக் கதை கண்டிப்பாக நினைவுக்கு வரும். அதோடு யானையை பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி